மும்பையில் செப்டம்பர் 10 முதல் 19 வரை 144 தடை உத்தரவை பிறப்பித்து மும்பை காவல்துறை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் செப்டம்பர் 10ஆம் தேதி முதல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடவுள்ளனர். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை 10 நாள்கள் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் மும்பையில் கரோனா பரவலை தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மும்பை காவல் ஆணையரகத்தின் செய்தித்தொடர்பாளர் எஸ். சைத்தன்யா ஐ.பி.எஸ். வெளியிட்ட செய்தியில்,
செப்டம்பர் 10 முதல் 19 வரை மும்பை மாநகரக் காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படவுள்ளது. விநாயகர் ஊர்வலங்களுக்கு அனுமதியில்லை. பொது இடங்களில் 5 பேருக்கு மேல் ஒன்றுகூட அனுமதிக்கப்படமாட்டாது.
மேலும், பக்தர்கள் அனைவரும் வீடுகளிலிருந்தே இணையதளம் மூலம் தரிசனம் செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
மும்பை காவல்துறையின் இந்த உத்தரவு மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.