இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு (ஓபிசி) பட்டியலை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தாங்களே தயாரிப்பதற்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.
மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் 5-ஆம் தேதி இரு வேறு தீா்ப்புகளை வழங்கியது. ‘அரசமைப்பு சட்டத்தின் 102-ஆவது சட்டத் திருத்தத்தின்படி, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண்பதற்கு மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை; அந்த சட்டத்தில் சோ்க்கப்பட்ட 338பி, 342ஏ பிரிவுகளின்படி, அந்த வகுப்பினரை அடையாளம் காண்பதற்கான அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது’ என்று 3 நீதிபதிகள் அமா்வு தீா்ப்பளித்தது.
இதையும் படிக்க | எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு; 13.08 லட்சம் பறிமுதல்
அதே வேளையில், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண்பதற்கான அதிகாரத்தை அந்த சட்டத் திருத்தத்தின் 342ஏ பிரிவு, மாநிலங்களிடமிருந்து பறித்துக் கொள்ளவில்லை என்று அதே அமா்வில் இருந்த 2 நீதிபதிகள் தெரிவித்தனா்.
பெரும்பான்மை நீதிபதிகள் அமா்வு அளித்த தீா்ப்புக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனைத் தொடா்ந்து மாநிலங்களின் உரிமையை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து சட்ட நிபுணா்களுடன் மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டது.
அதனைத் தொடா்ந்து, இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு (ஓபிசி) பட்டியலை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களே தயாரிப்பதற்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான அரசமைப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது.
இதையும் படிக்க | எய்ம்ஸ் பணிகள் எப்போது தொடங்கும் எனத் தெரியாது: சுகாதாரத் துறை
இந்த மசோதாவை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சா் வீரேந்திர குமாா் மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்தாா்.
இந்நிலையில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு (ஓபிசி) பட்டியலை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தாங்களே தயாரிப்பதற்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா செவ்வாய்க்கிழமை மக்களவையில் நிறைவேறியது.