தில்லியில் முதுநிலை நீட் தேர்வை உடனடியாக நடத்தக்கோரி பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையின் நடவடிக்கைக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மருத்துவ மாணவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நீட் முதுநிலை படிப்புக்கான கலந்தாய்வு காலதாமதமாவதைக் கண்டித்து, தில்லியில் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஒரு மாத காலமாக போராடி வரும் மருத்துவர்கள், நேற்று (டிச.28) தங்களது போராட்டத்தைப் பதிவு செய்யும் வகையில் உச்சநீதிமன்றம் நோக்கி மருத்துவர்கள் பேரணியாக புறப்பட்டனர்.
அவர்களது போராட்டத்தைத் தடுத்து நிறுத்தும் வகையில், காவலர்கள் மருத்துவ மாணவர்களை இழுத்தும், தள்ளிக்கொண்டும் சென்று கைது செய்தனர்.
இதில் சுமார் 200க்கும் அதிகமான மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் நள்ளிரவில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
கரோனா போன்ற பெருந்தொற்று காலங்களில் தன்னலமற்று மக்கள் சேவையாற்றிய மருத்துவர்களை அவர்களது கோரிக்கைகளுக்காக நியாயமான முறையில் போராட்டத்தில் ஈடுபடும்போது காவல் துறை அநாகரிகமான முறையில் நடந்துகொண்டதாக போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனால் இன்றும் மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தில்லி முழுவதும், ஏராளமான மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிப்பது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் கடுமையாக நடந்துகொண்ட காவல் துறையினருக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். மருத்துவ மாணவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.