லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் பகுதியில் கடந்த அக். 3 ஆம் தேதி நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் 4 பேர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இதற்கு அரசியல் தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். வன்முறையில் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனுடைய கார் விவசாயிகளின் மீது மோதியதன் காரணமாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உ.பி.யைச் சேர்ந்த இரு வழக்கறிஞர்கள் இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதையடுத்து உச்சநீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது. இன்று தலைமை நீதிபதி அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதையும் படிக்க | லக்கிம்பூர் வன்முறை: ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்தது உ.பி. அரசு
அப்போது, உ.பி. அரசு இந்த விவகாரத்தை சரியாக கையாளவில்லை என்றும் கடுமையான மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளதாகவும் தலைமை நீதிபதியிடம் முறையிட்ட வழக்கறிஞர்கள் இருவரும் குற்றம் சாட்டினர்.
அப்போது தலைமை நீதிபதி, உ.பி. அரசு வழக்கறிஞரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். வழக்கில் யார் யாரை கைது செய்துள்ளீர்கள்? யார் மீதெல்லாம் வழக்குப்பதிவு செய்துள்ளீர்கள்? வழக்கு விசாரணை எந்த நிலைமையில் உள்ளது? என்றெல்லாம் கேள்வி எழுப்பியதுடன் இதுகுறித்த முழு விவரங்களை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை நாளைய(வெள்ளிக்கிழமை) தினத்துக்கு ஒத்திவைத்துள்ளார்.
இதையும் படிக்க | ‘நீதிக்கான எனது போராட்டத்தை தொடர்வேன்’: பிரியங்கா காந்தி