பஞ்சாபில் பொதுக்கூட்டம் ஒன்றில் தொகுதிக்கு என்ன செய்தாய் என்று கேள்வி எழுப்பிய இளைஞரை காங்கிரஸ் எம்.எல்.ஏ. சரமாரியாக அறைந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பஞ்சாபில் ஏற்கெனவே முதல்வர் விவகாரத்தில் அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மத்தியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இவ்வாறு நடந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜோஜிந்தர் பால் கலந்துகொண்டார்.
பின்னர் தொகுதிக்காக அவர் கொண்டுவந்த திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் அவர் உரையாற்றும் போது, கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் 'தொகுதிக்கு உண்மையாக என்ன செய்தாய்?' என்று கேள்வி எழுப்பினார்.
உடனே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் இளைஞரை கூட்டத்திலிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். எனினும் இளைஞர் தொடர்ந்து கேள்வி எழுப்பியவாறு எம்.எல்.ஏ.வை நோக்கி முன்னேறினார்.
இதில் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ. பால், இளைஞரைத் தாக்க முயன்றார். இளைஞர் பின்வாங்க முயன்றதும் கைகளை நீட்டி கன்னத்தில் அறைய முயன்றார். இந்த விடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.