ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய தலைவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த ஐ.எஸ். தற்கொலைப்படை பயங்கரவாதி ரஷியாவில் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக காவல் துறையினருக்கு பாகிஸ்தான் எண்ணில் இருந்து தகவல் வந்த நிலையில், தில்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் கடந்த சில நாள்களாகவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஒருவரை ரஷிய பாதுகாப்புப் படையினர்(எஃப்.எஸ்.பி.) இன்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், இந்தியாவை ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவரை மனித வெடிகுண்டாக மாறி கொலை செய்யத் திட்டமிட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய ஆசிய நாட்டைச் சேர்ந்த அந்த தற்கொலைப்படை பயங்கரவாதியை, துருக்கியில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர்கள் தேர்வு செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த கைது நடவடிக்கை இந்தியாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், முக்கியத் தலைவர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.