உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் விமானம் தாங்கிப் போா்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் செப்டம்பர் 2 ஆம் தேதி இந்தியக் கடற்படையில் இணையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பலானது ரூ.23,000 கோடி செலவில் கொச்சி கப்பல்கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. இதன் மூலமாக விமானம் தாங்கிக் கப்பலை சொந்தமாகக் கட்டும் திறன் கொண்ட வெகுசில நாடுகளுடன் இந்தியாவும் இணைந்தது.
முன்னதாக, கடந்த ஆண்டு கொச்சியில் நிறுத்தப்பட்டிருந்த ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும் தனித்தனியாகப் பாா்வையிட்டனா்.
இதையும் படிக்க: டிரோன்களை அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் முதலாவது சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் 5 நாள்களுக்கு நடைபெற்றது. பின்னா் கடந்த அக்டோபர், ஜனவரி, ஜூலை மாதம் என மொத்தம் 4 சோதனை ஓட்டங்கள் நடைபெற்றுள்ளன.
1,700 வீரர்கள் பயணிக்கும்படியாக உருவாகியுள்ள இக்கப்பலிலிருந்து மிக் - 29கே போா் விமானங்கள், கமோவ் - 31 ஹெலிகாப்டா்கள், எம்ஹெச் - 60ஆா் ஹெலிகாப்டா்கள் ஆகியவற்றை இயக்கவும் தரையிறக்கவும் முடியும். அதிகபட்சமாக சுமாா் 28 நாட் வேகத்தில் கப்பலை இயக்க முடியும்.
இந்நிலையில், ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பலை வரும் செப் - 2 ஆம் தேதி இந்திய கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சி கொச்சியில் நடைபெற உள்ளது என்றும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு ஐஎன்எஸ் விக்ராந்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.