பிரதமர் நரேந்திர மோடி குறித்து நாகரீகமற்ற முறையில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோவினை கண்டித்தும், பிரதமருக்கு ஆதரவாகவும் பாஜகவினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் பிலாவல் புட்டோ அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை குஜராத்தில் பலரை கொன்று குவித்த கொலையாளி என நாகரீகமற்ற முறையில் விமர்சித்திருந்தார். இதனையடுத்து, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சரின் இந்த முறையற்ற பேச்சுக்கு அமைச்சர்களும், பாஜகவைச் சேர்ந்த பலரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோவின் கருத்தினை கண்டிக்கும் விதமாகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு திரட்டும் விதமாகவும் நாடு முழுவதும் பாஜக சார்பில் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ள பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அந்தந்த மாநிலத் தலைநகரை நோக்கிப் பேரணியாக செல்வதை முன்னெடுத்துள்ளனர். இந்தப் போராட்டத்தின்போது பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோவினை வெறுப்பு அமைச்சர் எனக் கூறியும், அவரது உருவ பொம்மையும் எரித்தும் வருகின்றனர். பிலாவல் புட்டோ இந்தியாவில் உள்ள 135 கோடி மக்களிடமும் அவரது இந்தத் தரக்குறைவான செயலுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். அனைத்து மாநிலங்களிலும் பிரதமருக்கு ஆதரவாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து வருவதாகவும், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறியுள்ளது எனவும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதையடுத்து பிலாவல் புட்டோ பிரதமர் நரேந்திர மோடி குறித்து இத்தகைய நாகரீகமற்ற கருத்தினை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.