
ஆர்ஜென்டீனா அணியின் வெற்றியைத் தொடர்ந்து கேரளத்தில் உணவக உரிமையாளர் ஒருவர் ஆயிரம் பேருக்கு இலவசமாக பிரியாணி வழங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
கால்பந்தாட்டத்திற்கு கேரளத்தில் அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கும்போதே அவர்களின் விருப்பமான வீரர்களுக்கு பெரிய அளவில் பதாகைகள் வைத்து கொண்டாடினர்.
மேலும், கடைகள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்களில் உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்பட்டன.
இந்நிலையில், திருச்சூரில் உணவக உரிமையாளர் ஷிபு என்பவர், மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணியின் தீவிர ரசிகர். அவர் போட்டியின்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் ஆர்ஜென்டீனா அணி வெற்றிபெற்றால் உணவகத்தில் ஆயிரம் பேருக்கு இலவசமாக பிரியாணி வழங்குவதாக அறிவித்தார்.
அதன்படி நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸுக்கு எதிரான போட்டியில் ஆர்ஜென்டீனா அணி வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது.
அதனைத் தொடர்ந்து ஷிபு, இன்று தனது உணவகத்திற்கு முதலில் வரும் 1,000 வாடிக்கையாளர்களுக்கு பிரியாணி வழங்கினார். இதற்காக அவரின் கடைக்கு வெளியே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். அதிக அளவில் கூட்டம் குவிந்ததால், அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களும் மெஸ்ஸியின் தீவிர ரசிகர்கள் என்பதால், ஊழியர்களும் இடைவேளை எடுக்காமல், வாடிக்கையாளர்களுக்கு பிரியாணி வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.