கடன் உச்சவரம்பு மீறல்: மாநிலங்களுக்கு விதிகளில் தளர்வு- 4 ஆண்டுகளுக்கு நிவாரணம்
மாநிலங்கள் திட்டமிட்டப் பணிகளுக்கு அப்பாற்பட்டு பெறப்பட்ட கடன்களுக்கான உச்சவரம்பு விதிகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளதாக மத்திய நிதித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


மாநிலங்கள் திட்டமிட்டப் பணிகளுக்கு அப்பாற்பட்டு பெறப்பட்ட கடன்களுக்கான உச்சவரம்பு விதிகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளதாக மத்திய நிதித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, அடுத்த 4ஆண்டுகளில் அதாவது 2026 மார்ச் மாதத்துக்குள் நிலுவைக் கடன்களை சரிசெய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய செலவினத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்கள் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது, திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவும், கடனைப் பெறவும் திட்டமிடப்படும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கரோனா நோய்த்தொற்று உள்ளிட்டவற்றால் மாநிலங்கள் திட்டமிடப்பட்ட பணிகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் கடன்களை சந்தைகளில் பெற்றன. இதில், மாநில அரசு மட்டுமின்றி மாநில அரசின் பொது நிறுவனங்களும் கடனைப் பெறுவது அடங்கும். உதாரணமாக தமிழகத்தில் போக்குவரத்துக் கழகங்கள், சிறப்பு வகையில் கடன்கள் பெற்றிருந்தாலும் அதுவும் மாநில அரசுகளின் கணக்கில் சேர்க்கப்படும்.
கடந்த 2019-20 நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ. 66, 774 கோடியாக இருந்தது. 2020-21 ஆண்டில் ரூ. 1,08,851 கோடியாக உயர்ந்தது. இவ்வாறு தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் ரிசர்வ் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடனைப் பெற்றுள்ளன. முந்தைய கடன்கள் நிலுவையில் உள்ள நிலையில் மத்திய அரசு நிர்ணயித்துள்ள உச்சவரம்பை மீறும் போது நிகழ் நிதியாண்டில் கடன்கள் மறுக்கப்படும். முந்தைய கடன் தொகைகள் முடிந்த பிறகே, நிகழ் நிதியாண்டில் மாநில அரசுகள் கடன்களைப் பெற முடியும். ஆனால், மாநிலங்களின் வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், நிகழாண்டின் மூலதனச் செலவுகளைக் கருத்தில் கொண்டும் மத்திய அரசு கடன்களுக்கான இந்த உச்சவரம்பு விதிமுறைகளைத் தளர்த்தியுள்ளது. அதன்படி, 2026 மார்ச் மாதத்துக்குள் கடன் பாக்கிகளை சரி செய்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாநில அரசுகளுக்கு மூலதனச் செலவுகளுக்குத் தேவையான நிதி ஆதாரங்களைப் பெற மத்திய அரசு வழியை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய நிதித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மாநில நிதிகளில் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கவும், கடன்கள் வரம்புக்குள் இருக்கவும் மத்திய அரசு கட்டுப்பாடுகளை வகுத்து வந்தது. குறிப்பாக, ஒரு நிதியாண்டில் மாநிலங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நிகரக் கடன் உச்சவரம்பைத் தவிர்த்து, மாநில நிதிநிலை அறிக்கையின் திட்டமிடலுக்கு மேலே மாநில அரசுகளும், அதன் நிறுவனங்களும் வெளியே சட்டப்பூர்வ அமைப்புகளில் கடனைப் பெறும்போது அந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறையில் பாதிப்புகளை உருவாக்கும்.
இந்த நிலையில்தான், மாநிலங்களை விதிமுறைகள் மூலம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் வைத்து கையாண்டு வந்தது. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகளால் நிகழ் நிதியாண்டில் பல மாநிலங்கள் எதிர்கொண்டுள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை இந்த விதிமுறைகளைத் தளர்த்தியுள்ளது. குறிப்பாக, 2021-22 நிதியாண்டில் பெறப்பட்ட கடன்களை மார்ச் 2026 வரை 4 ஆண்டுகள் வரை சரி செய்து கொள்ளலாம் என மாநிலங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் 2021-22 நிதியாண்டில் ரூ. 7.9 லட்சம் கோடி வரை கடன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...