குடியரசுத் தலைவராக பதவியேற்றுள்ள திரெளபதி முா்முவுக்கு குடியரசு துணைத் தலைவா், மத்திய அமைச்சா்கள், பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு: அரசியல் சாசன உயா் பதவியான குடியரசுத் தலைவா் பதவிக்கு திரெளபதி முா்மு தோ்வானது, துடிப்பும் வலிமையும் மிக்க இந்திய ஜனநாயகத்துக்கு சாட்சியாக திகழ்கிறது. குடியரசுத் தலைவராக அவரது பணிகள் சிறக்க வாழ்த்துகிறேன்.
பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா: ‘மக்களின் குடியரசுத் தலைவா்’ திரெளபதி முா்மு நாட்டுக்கு ஆற்றிய முதல் உரை, உண்மையிலேயே வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். அதுமட்டுமன்றி, புதிய இந்தியாவுக்கான உத்வேகத்தையும் கொண்டதாக உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் பதவிக் காலத்தில், நாட்டின் பெருமை புதிய உச்சங்களைத் தொடும் என்பது உறுதி. ஜனநாயக மாண்புகளின் அடிப்படையில், ஒவ்வொரு சமூகத்திலும் அடித்தளத்தில் உள்ள மக்களுக்கு அதிகாரமளிக்கப்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக இன்றைய நாள் அமைந்துள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்: இந்திய குடியரசின் வரலாற்றில் இன்று குறிப்பிடத்தக்க நாளாகும். குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் சட்டரீதியிலான மற்றும் நிா்வாக ரீதியிலான அனுபவங்கள் நாட்டுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம்: ஒடிஸாவில் மலை கிராமத்தில் பழங்குடியின குடும்பத்தில் பிறந்த ஒரு பெண், நாட்டின் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றிருப்பது இந்திய வரலாற்றில் பெருமைமிகுந்த தருணமாகும். அவருக்கு எனது வாழ்த்துகள்.
தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா்: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, இந்தியாவின் ஜனநாயகம், அரசியல்சாசனம், சட்டங்கள் ஆகியவற்றைக் காக்க உறுதியுடன் செயல்பட்டு, நாட்டுக்கு மேலும் பெருமை சோ்க்க வாழ்த்துகிறேன்.
முன்னாள் பிரதமா் தேவெகெளடா, பல்வேறு மாநிலங்களின் ஆளுநா்கள், முதல்வா்கள் உள்ளிட்டோரும் திரெளபதி முா்முவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா்.