அமராவதி: கரோனா தொற்று காரணமாக திரையரங்குகளின் வருவாய் குறைந்த நிலையில் தயாரிப்பு செலவுகள் பல மடங்கு உயர்ந்துள்ளதால், "தொழிலை மறுசீரமைக்கும்" முயற்சியில் ஆகஸ்ட் 1 முதல் திரைப்படங்களுக்கான படப்பிடிப்பை நிறுத்த தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த இரண்டு நாள்களாக ஹைதராபாத்தில் பல திரைப்படத் தயாரிப்பாளர்கள் கூட்டங்களை நடத்தி, தொழில்துறையின் உயிர்வாழ்விற்கான விவகாரங்கள் மற்றும் தொழில்துறையை மீட்பதற்கான நடவடிக்கை குறித்து ஆலோசித்து வந்தனர்.
மேலும், ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் படப்பிடிப்பை நிறுத்துவது குறித்து தெலுங்கு திரைப்பட வர்த்தக சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
“ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப்-2 மற்றும் ஒன்று அல்லது இரண்டு போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களைத் தவிர, பிற படங்களின் திரையரங்கு வருவாய் 20 சதவீதத்திற்கு கீழ் குறைந்துள்ளது. ஏற்கனவே கரொனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தொழில்துறையை இது மேலும் கடுமையாக பாதித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் தொழில்துறையின் நிலைத்தன்மை அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது, ”என்று தயாரிப்பாளர் தெரிவித்தார்.
உற்பத்தியாளர்கள் ஒன்றிணைந்து, முழுத் தொழிலையும் மறுகட்டமைப்பதற்கான வழிகளை உருவாக்கி அதனை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், திரையரங்குகளில் வெளியாகும் எந்தவொரு புதிய திரைப்படத்தையும் 10 வாரங்களுக்கு ஒடிடி தளங்களில் வெளியிட வேண்டாம் என்று முடிவை தயாரிப்பாளர்கள் எடுத்துள்ளனர்.
“இப்போது, பெரிய நட்சத்திரங்களின் படங்கள் கூட மூன்று வாரங்களுக்குள் ஒடிடி தளங்களில் வந்துவிடுகின்றன. இது திரையரங்குகளின் வருவாய் குறைப்பில் முக்கிய பங்களிக்கிறது. இத்தகைய சந்தையில் சிறிய பட்ஜெட் படங்களின் நிலை கேள்விக் குறியாக உள்ளது,” என்று மற்றொரு பிரபல தயாரிப்பாளர் கூறினார்.
"அடுத்த சில நாள்களில் மேலும் பேச்சுவார்த்தை நடத்தி, தொழில்துறையை மீட்டெடுப்பாதற்கான வழிகள் குறித்த இறுதி முடிவு எடுப்போம்" என்று தயாரிப்பாளர் கூறினார்.
இந்நிலையில், ஆரோக்கியமான சூழலில் திரைப்படங்களை வெளியிடுவதை உறுதி செய்வது நம்முடைய பொறுப்பு எனவும், அனைத்து உறுப்பினர்களும் தானாக முன்வந்து படப்பிடிப்புகளை ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.