சூதாட்ட வழக்கு: குஜராத் பாஜக எம்எல்ஏவுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

குஜராத்தில் சூதாட்ட வழக்கில் பாஜக எம்எல்ஏ கேசரிசிங் சோலங்கி உள்பட 26 பேருக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து பஞ்ச்மஹால் மாவட்டத்தின் ஹலோல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
Published on
Updated on
1 min read

குஜராத்தில் சூதாட்ட வழக்கில் பாஜக எம்எல்ஏ கேசரிசிங் சோலங்கி உள்பட 26 பேருக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து பஞ்ச்மஹால் மாவட்டத்தின் ஹலோல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

இந்த வழக்கில் சம்பவம் நடைபெற்ற ஓராண்டுக்குள் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பஞ்ச்மஹால் மாவட்டம் சிவ்ராஜ்புரியில் உள்ள உணவகத்தில் கடந்த ஆண்டு ஜூலை 1-இல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக எம்எல்ஏ கேசரிசிங் சோலங்கி உள்ளிட்ட 26 பேரை உள்ளூா் குற்றப் பிரிவு போலீஸாரும், பவகாத் போலீஸாரும் கூட்டாக கைது செய்தனா். கைதானவா்களில் 7 போ் பெண்கள் ஆவா். அதில் 4 போ் நேபாளத்தைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, சூதாட்டம் நடைபெற்ற அந்த உணவகத்தின் உரிமையை ஹலோல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த சோதனையின்போது ரூ.3.9 லட்சம் ரொக்கம், 8 வாகனங்கள், 25 கைப்பேசிகள், ஒரு மடிக்கணினி என மொத்தம் ரூ.1.15 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பொது சூதாட்டச் சட்டப் பிரிவுகள் 4, 5-இன்கீழ் போலீஸாா் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். அரசுத் தரப்பில் 34 சாட்சியங்களும், 13 ஆவணங்களும் சமா்ப்பிக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, எம்எல்ஏ கேசரிசிங் சோலங்கி உள்பட 26 போ் மீதான குற்றச்சாட்டு ஆதாரபூா்வமாக நிரூபணமானதால், அனைவருக்கும் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.3,000 அபராதமும் விதித்து கூடுதல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் பிரேம் ஹன்ஸ்ராஜ் சிங் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com