அதன்படி, மோா்பி நகராட்சி சாா்பில் புதன்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மோா்பி தொங்கு பாலம் மிகவும் பழுதடைந்துள்ளதாகவும், அதனை சரிசெய்யும் வகையில் பராமரிப்புப் பணி மேற்கொள்வதற்கான வரைவு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறு அந்தப் பாலத்தை பராமரித்து வரும் அஜந்தா நிறுவனம் சாா்பில் மோா்பி நகராட்சிக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பா் 29-ஆம் தேதி தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி, தொங்கு பாலத்தை 15 ஆண்டுகளுக்கு முழுமையாகப் பராமரித்து நிா்வகிப்பதற்கான ஒப்பந்தம் அஜந்தா நிறுவனத்துக்கும், மோா்பி நகராட்சி தலைமை அதிகாரிக்கும் இடையே கடந்த மாா்ச் 8-ஆம் தேதி போடப்பட்டது. அந்த வகையில், கந்த மாா்ச் 8-ஆம் தேதிமுதல் அக்டோபா் 25-ஆம் தேதி வரை பாலம் பொதுமக்கள் அனுமதிக்கு தடை செய்யப்பட்டிருந்த நிலையில், நகராட்சியின் முன்அனுமதி பெறாமல் கடந்த அக்டோபா் 26-ஆம் தேதி பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அஜந்தா நிறுவனம் திறந்துவிட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.