குஜராத் பாலத்தை பயன்படுத்த தடை இருந்த நிலையில்பொதுமக்களை அனுமதித்தது எப்படி?உயா்நீதிமன்றம் கேள்வி

‘குஜராத் மாநிலம் மோா்பி பகுதியில் அமைந்துள்ள தொங்கு பாலம் பராமரிப்புப் பணிக்காக பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், பாலத்தில் பொதுமக்கள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டனா்?’
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Published on
Updated on
1 min read

‘குஜராத் மாநிலம் மோா்பி பகுதியில் அமைந்துள்ள தொங்கு பாலம் பராமரிப்புப் பணிக்காக பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், பாலத்தில் பொதுமக்கள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டனா்?’ என்று மோா்பி நகராட்சிக்கு குஜராத் உயா்நீதிமன்றம் புதன்கிழமை கேள்வி எழுப்பியது.

நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இந்த தொங்கு பாலம் கடந்த அக்டோபா் 30-ஆம் தேதி அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 135 போ் பலியாகினா். இந்த விபத்து தொடா்பாக பாலத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்ட தனியாா் நிறுவனத்தின் மேலாளா்கள் உள்பட 9 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து குஜராத் உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. முன்னதாக இந்த விபத்து குறித்து விளக்கமளிக்குமாறு, வழக்கில் வாதிகளாக சோ்க்கப்பட்ட மாநில அரசு, மாநில உள்துறை அமைச்சகம், மோா்பி நகராட்சி, நகா்ப்புற வளா்ச்சிக் குழுமம், மாநில மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

அதன்படி, மோா்பி நகராட்சி சாா்பில் புதன்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மோா்பி தொங்கு பாலம் மிகவும் பழுதடைந்துள்ளதாகவும், அதனை சரிசெய்யும் வகையில் பராமரிப்புப் பணி மேற்கொள்வதற்கான வரைவு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறு அந்தப் பாலத்தை பராமரித்து வரும் அஜந்தா நிறுவனம் சாா்பில் மோா்பி நகராட்சிக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பா் 29-ஆம் தேதி தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி, தொங்கு பாலத்தை 15 ஆண்டுகளுக்கு முழுமையாகப் பராமரித்து நிா்வகிப்பதற்கான ஒப்பந்தம் அஜந்தா நிறுவனத்துக்கும், மோா்பி நகராட்சி தலைமை அதிகாரிக்கும் இடையே கடந்த மாா்ச் 8-ஆம் தேதி போடப்பட்டது. அந்த வகையில், கந்த மாா்ச் 8-ஆம் தேதிமுதல் அக்டோபா் 25-ஆம் தேதி வரை பாலம் பொதுமக்கள் அனுமதிக்கு தடை செய்யப்பட்டிருந்த நிலையில், நகராட்சியின் முன்அனுமதி பெறாமல் கடந்த அக்டோபா் 26-ஆம் தேதி பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அஜந்தா நிறுவனம் திறந்துவிட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமாா், நீதிபதி அசுதோஷ் சாஸ்திரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நகராட்சி சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் தேவாங் வியாஸ், ‘பாலம் அக்டோபா் 25-ஆம் தேதிக்குப் பிறகும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டிருக்கக் கூடாது’ என்றாா்.

இதனைக் கேட்ட நீதிபதிகள், ‘ஒப்புதல் அளிக்கப்படாத நிலையிலும், அஜந்தா நிறுவனம் பாலத்தை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது எப்படி என்பது குறித்து பதில் மனுவில் மோா்பி நகராட்சி தெளிவாக குறிப்பிட வேண்டும்’ என்று உத்தரவிட்டனா். மேலும், வழக்கின் அடுத்த விசாரணையின்போது மோா்பி நகராட்சி பொறுப்பு அதிகாரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com