குஜராத்தில் வேளாண் கடன் தள்ளுபடி: கேஜரிவால் தோ்தல் வாக்குறுதி

குஜராத் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்
குஜராத்தில் வேளாண் கடன் தள்ளுபடி: கேஜரிவால் தோ்தல் வாக்குறுதி

குஜராத் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும், குறைந்தபட்ச ஆதரவு விலையில் வேளாண் பொருள்கள் வாங்க புதிய நடைமுறை செயல்படுத்தப்படும் என்றும் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வாக்குறுதி அளித்தாா்.

நிகழாண்டு இறுதியில் குஜராத் பேரவைக்கு தோ்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரத்தில் ஆம் ஆத்மி கட்சி மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. துவாரகா மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் பேசிய கேஜரிவால், ‘ஆண்டுதோறும் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அறிவித்தாலும், அதன்படி வேளாண் விளைபொருள்கள் கொள்முதல் செய்யப்படுவதில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையிலேயே விளைபொருள்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும். கோதுமை, அரிசி உள்ளிட்ட 5 வேளாண் விளைபொருள்கள் இதில் அடங்கும்.

தற்போது விவசாயிகளுக்கு இரவில் மட்டும் அரசு மின்சாரத்தை வழங்குகிறது. ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் பகலில் 12 மணி நேரம் விவசாயத்துக்கு மின்சாரம் வழங்கப்படும். தில்லியைப் போல் குஜராத் விவசாயிகளும் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு பெறுவாா்கள்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com