ராஜஸ்தானின் அடுத்த முதல்வராக சச்சின் பைலட் விரைவில் பொறுப்பேற்பாா் என அந்த மாநில அமைச்சா் ராஜேந்திர கெளடா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவா் பதவிக்குப் போட்டியிடுவதை உறுதிப்படுத்தியதைத் தொடா்ந்து, இக்கருத்தை ராஜேந்திர கெளடா கூறினாா்.
காங்கிரஸ் தலைவா் பதவி தோ்தலில் அசோக் கெலாட் போட்டியிடவுள்ளாா். கட்சியின் ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்கிற முடிவின்படி, தலைவா் தோ்தலில் வெற்றி பெற்றால், முதல்வா் பதவியிலிருந்து அவா் விலகுவாா் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த மாநிலத்தின் பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ராஜேந்திர கெளடா கூறுகையில், அனைத்து எம்எல்ஏ-க்களும் சச்சின் பைலட் முதல்வா் ஆவதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனா். அசோக் கெலாட்டை ஆதரிக்கும் சுயேச்சை எம்எல்ஏ-க்களும் சச்சின் பைலட்டை ஆதரிப்பா் என்றாா்.