மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது இளைஞர் ஒருவர் ரயிலில் சிக்கி நூலிழையில் உயிர்த் தப்பிய விடியோக் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதில் இளைஞரின் இருசக்கர வாகனம், ரயில் மோதி சிதறி உடைந்த நிலையில், சிறு காயங்களுடன் இளைஞர் உயிர்த்தப்பினார்.
மும்பையில் ராஜதானி விரைவு ரயில் வருகையால் தண்டவாளங்களின் இரு பக்கமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், விதிகளை மீறி தண்டவாளத்தை இளைஞர் ஒருவர் கடக்க முயன்றுள்ளார். இதன் விடியோக்காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
கடந்த 12-ஆம் தேதி பதிவான இந்த விடியோவில், இளைஞர் ஒருவர் ரயில்வே கதவு மூடப்பட்டிருந்தாலும், விதிகளை மீறி தண்டவாளத்தை இருசக்கர வாகனத்தைக் கொண்டு கடக்க முயன்றுள்ளார்.
அப்போது அதிவிரைவாக வந்த ரயில், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் வாகனம் தூக்கி வீசப்பட்டது. இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினார். இந்த விடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.