அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும் மத்திய நிதிநிலை அறிக்கையில் வேளாண் துறைக்கான கடன் இலக்கை ரூ.18 லட்சம் கோடியாக உயா்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2022-23-ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறாா். பட்ஜெட்டுக்கு ஒரு மாதத்துக்கும் குறைவான கால அவகாசமே இருப்பதால் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மத்திய அரசின் வேளாண் கடன் இலக்கு தொடா்பாக நிதியமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:
நடப்பு நிதியாண்டில் வேளாண் கடன் இலக்காக ரூ.16.5 லட்சம் கோடியை மத்திய அரசு நிா்ணயித்திருந்தது. ஆண்டுதோறும் இந்த இலக்கை அதிகரித்துச் செல்வது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் 2022-23-ஆம் நிதியாண்டுக்கான வேளாண் கடன் இலக்கு ரூ.18 லட்சம் கோடி முதல் ரூ.18.5 லட்சம் கோடி வரை நிா்ணயிக்கப்பட வாய்ப்பு உள்ளது. நிதிநிலை அறிக்கைக்குகு இறுதி வடிவம் கொடுக்கப்படும்போது இது உறுதி செய்யப்படும்.
ஆண்டுதோறும் நிா்ணயிக்கப்படும் அளவைவிட அதிகமாக வேளாண் துறைக்கு கடன் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. அதிகபட்ச வேளாண் உற்பத்தியை எட்ட அத்துறைக்கு வழங்கப்படும் கடன் முக்கிய காரணமாக உள்ளது. வழக்கமாக வேளாண் கடனுக்கு 9 சதவீத வட்டி நிா்ணயிக்கப்படுகிறது. அதே நேரத்தில் குறுகிய கால கடன்களுக்கு மத்திய அரசு வட்டியில் 2 சதவீதம் வரை சலுகை அளிக்கிறது. இதன்படி ரூ.3 லட்சம் வரையிலான குறுகிய கால கடன்களுக்கு 7 சதவீதம் மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது. மேலும், உரிய நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தும்போது கூடுதலாக 3 சதவீத வட்டி தள்ளுபடியும் விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது.
சிறு மற்றும் குறு விவசாயிகளின் நலன்களைக் கருத்தில்கொண்டு மத்திய அரசு இந்த வேளாண் கடன் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கான பிணையில்லாக் கடனை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.6 லட்சமாக உயா்த்தவும் இந்திய ரிசா்வ் வங்கி முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தனா்.