கேரளம் எதிர்கொண்டிருக்கும் மூன்றாம் அலை ஒமைக்ரான் அலை என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 51,739 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 58.26 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது:
"கேரளத்திலுள்ள மூன்றாம் அலை ஒமைக்ரான் அலை என்பது தற்போது தெளிவாகிவிட்டது. கரோனா நோயாளிகளின் 94 சதவிகித மாதிரிகளில் ஒமைக்ரான் வகை கரோனா இருக்கிறது. டெல்டா வகை 6 சதவிகித மாதிரிகளில் உள்ளது.
இதையும் படிக்க | தில்லியில் குறையும் கரோனா: புதிதாக 4 ஆயிரம் பேருக்கு கரோனா
மற்ற இடங்களிலிருந்து கேரளம் வந்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 80 சதவிகிதம் பேர் ஒமைக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 20 சதவிகிதம் பேர் டெல்டா வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார் அவர்.
முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை அதிகளவாக 55,475 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானது. நோய்த் தொற்று காலத்திலேயே இதுதான் ஒருநாள் அதிகளவு பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.