நாட்டில் அனைத்து மக்களும் முகக்கவசம் அணிவது கட்டாயம் தொடரும் என்று உள்துறை அமைச்சகம் அறிக்கை வாயிலாக மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக உள்துறை செயலாளர் அஜய் பல்லா வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் விதிகளை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும், உள்துறை அமைச்சகமும் ரத்து செய்கிறது.
எனினும் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிவது தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 24 மாதங்களாக கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து குணப்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மத்திய சுகாதாரத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டன. மாநில அரசுகளும் பெருந்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் மாநில அளவில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
தற்போது கடந்த 7 வாரங்களாக கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் நாட்டில் குறைந்து வருகிறது. நாட்டில் கரோனா பாதிப்பு விகிதம் 0.28 சதவிகிதமாக குறைந்துள்ளது. 181.56 கோடி தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கரோனா கட்டுப்பாடுகள் குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை பிப்ரவரி 25ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அதற்கடுத்து எந்தவித புதிய அறிவிப்பும் வெளியாகவில்லை.
எனினும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வதும், முகக்கவசம் அணிவதும் தொடர்ந்து கடைபிடிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ளூர் அளவுகளில் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். மற்றபடி கரோனா கட்டுப்பாட்டை வலியுறுத்தி மத்திய சுகாதாரத் துறை அவ்வபோது வெளியிட்டுள்ள அறிவிப்புகளை தற்போது பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.