அரசுப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், தனியார் துறையில் குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம் பெற்றிருப்பது கட்டாயமாக்க கோவா அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு கண்காட்சி ஒன்றில் இளைஞர்களிடம் பேசிய முதல்வர்,
இனி நேரடி வேலைவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. பட்டப் படிப்பை முடிப்பதற்கு முன் பலர் கணக்கு மற்றும் பிற பதவிகளுக்காக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கின்றனர்.
இனி இவ்வாறு நடக்காது. அரசு வேலைக்கு குறைந்தபட்சம் தனியார் துறையில் ஒரு வருட அனுபவம் தேவை என்றார்.
எதிர்காலத்தில் அரசு வேலை ஆட்சேர்ப்பின்போது முந்தைய பணி அனுபவம் கட்டாயம் சேர்க்கப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் அரசு பதவிக்கு விண்ணப்பிக்கும் முன் தனியார் துறையில் வேலை தேட வேண்டும்.
கோவா அரசு ஒருபுறம் உள்கட்டமைப்பை உருவாக்குகிறது, மறுபுறம் மனித வளத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. உருவாக்கப்பட்ட மனித வளத்தின் திறமையை தனியார் மற்றும் அரசு எவ்வாறு பயன்படுத்த முடியும் என்று நாங்கள் யோசித்து வருகிறோம்.
நேரடியாக வேலைகளை வழங்குவதை நிறுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த நடைமுறை எங்களுக்குத் திறமையான மனித வளத்தை வழங்கும். ஆள்சேர்ப்பு விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மாற்ற முடிவு செய்துள்ளோம். கடந்த 30 ஆண்டுகளாக அவை மாறவே இல்லை.
பட்டதாரிகளும் மற்றவர்களும் தங்கள் தகுதியை மேம்படுத்தக் கூடுதல் படிப்புகளைக் கற்க வேண்டியது அவசியம் என்று சாவந்த் வலியுறுத்தினார்.