ஷ்ரத்தா கொலையில் திடீர் திருப்பம்: தாடைப் பகுதியை கண்டெடுத்த காவல்துறை?

ஷ்ரத்தா வால்கரைக் கொன்று 35 துண்டுகளாக வெட்டி புது தில்லியின் பல்வேறு இடங்களிலும் வீசிய சம்பவத்தில் புதிய திருப்பமாக, மனிதத் தாடைப் பகுதியை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.
ஷ்ரத்தா கொலையில் திடீர் திருப்பம்: தாடைப் பகுதியை கண்டெடுத்த காவல்துறை?


புது தில்லி: புது தில்லியில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த ஷ்ரத்தா வால்கரைக் கொன்று 35 துண்டுகளாக வெட்டி புது தில்லியின் பல்வேறு இடங்களிலும் வீசிய சம்பவத்தில் புதிய திருப்பமாக, மனிதத் தாடைப் பகுதியை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.

காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், மனிதத் தாடை எலும்புப் பகுதி கிடைத்திருப்பதாகவும், தில்லியைச் சேர்ந்த நிபுணத்துவம் பெற்ற பல் மருத்துவரிடம் உதவி கோரப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிடைத்திருக்கும் தாடைப் பகுதி  27 வயதான கொலை செய்யப்பட்ட பெண்ணின் எலும்புதானா என்பதை உறுதி செய்ய பல்வேறு தரவுகளையும் மருத்துவர் கோரியிருப்பதாகவும், பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு அது ஷ்ரத்தாவின் தாடை எலும்புதானா என்பது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

விசாரணை எப்படி போகிறது?

காவல்துறை விசாரணை அதிகாரிகள், ஷ்ரத்தா கொலை தொடர்பாக அஃதாபிடம் எந்தக் கேள்வி கேட்டாலும் உடனே ஒரு கதையைச் சொல்வது போல பேசத் தொடங்கிவிடுகிறார். எப்படி இவ்வளவு துல்லியமாக இதைச் சொல்கிறாய் என்று அதிகாரிகள் கேட்டால், தான் கைது செய்யப்பட்டது முதல் இதேக் கேள்வியைத்தான் மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். பதில் சொல்லி சொல்லி பழகிவிட்டது, எங்கே கண்ணீரும், குற்ற உணர்ச்சியும் வர முடியும் என்று குறிப்பிட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், ஷ்ரத்தாவைக் கொன்றது ஏன் என்பது குறித்த கேள்விக்கும், ஷ்ரத்தாவின் உடல்பாகங்கள் எங்கெங்கு வீசப்பட்டன என்ற கேள்விகளுக்கு மட்டும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான பதில்களை அளித்துள்ளார் அஃப்தாப். இதனால் காவல்துறையினர் அஃப்தாப் கூறுவது எதையும் வைத்து ஒரு முடிவுக்கு வரக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

அஃப்தாப்பிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் கூறுகையில், ஷ்ரத்தா மீது இருந்த ஏதோ ஒரு கோபம் அல்லது ஆத்திரம் அல்லது அதிருப்திதான் அஃப்தாபைக் கொலை செய்யத் தூண்டியிருக்கிறது. 

அவருடன் எடுத்த மிகப்பெரிய புகைப்படங்களையும் அஃப்தாப் எரித்துள்ளார். அந்தக் கோபத்தில்தான், ஷ்ரத்தாவின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தையும் தனது கணக்குக்கு மாற்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மேலும், தன்னிடமிருந்து ஷ்ரத்தா பணத்தைப் பறித்துக் கொண்டு திருப்பிக் கொடுக்கவில்லை என்றும், அதனால்தான் அவரைக் கொன்ற பிறகு வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டதாகவும் அஃப்தாப் கூறியுள்ளார்.

ஆனால், அஃப்தாப் சொல்லும் எதையும் நம்ப காவல்துறை தயாராக இல்லை. அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரைய்ன் மேப்பிங் மற்றும் போலிகிராஃப் சோதனை உள்ளிட்டவற்றை நடத்தவும் திட்டமிடப்பட்டுளள்து.

அஃப்தாப், ஏராளமான டேட்டிங் செயலிகளில் இணைந்திருப்பது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் காவல்துறையினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com