கேரளத்தில் 9 பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் ஆளுநர் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை பதவியில் நீடிக்கலாம் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பதவி விலகக் கோரி ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக துணை வேந்தர்கள் தொடர்ந்த மனுவை விசாரித்த கேரள நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழக துணைவேந்தா், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிமுறைகளுக்கு மாறாக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவரின் நியமனத்தை அண்மையில் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
அதனைத் தொடர்ந்து கேரளத்திலுள்ள பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்ட முறை கேள்விக்குறியாகியுள்ளது.
இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி கேரளத்தில் உள்ள 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் ராஜிநாமா செய்ய வேண்டும் என கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் சுட்டுரையில் உத்தரவிட்டிருந்தார்.
ராஜிநாமா செய்ய வேண்டிய பல்கலைக் கழக துணை வேந்தர்களின் பட்டியலையும் இணைந்திருந்தார். அதனைத் தொடர்ந்து ராஜிநாமா செய்ய வலியுறுத்தப்பட்ட துணை வேந்தர்கள், ஆளுரின் உத்தரவை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அதனை அவசர வழக்காக விசாரித்த கேரள நீதிமன்றம், ஆளுநர் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை 9 பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள், பதவியில் நீடிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது.