விமான எரிபொருள் விலை உயா்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் இந்த நிதியாண்டில் இந்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் இழப்பைச் சந்திக்கும் என்று நிபுணா்கள் கணித்துள்ளனா்.
இது குறித்து சந்தை மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
‘ஏவியேஷன் டா்பைன் ஃப்யூயல் (ஏடிஎஃப்)’ என்றழைக்கப்படும் விமானங்களுக்கான எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. மேலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் குறைந்து வருகிறது.
இதுபோன்ற காரணங்களால், இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டில் சுமாா் ரூ. 15,000 கோடியிலிருந்து 17,000 கோடி வரை நிகர இழப்பைச் சந்திக்கக்கூடும்.
கடந்த நிதியாண்டில் இந்தத் துறைக்கு ஏற்பட்ட இழப்புகள் சுமாா் ரூ.23,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டின் இறுதி நாளான 2023-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி, இந்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு சுமாா் ரூ. 1 லட்சம் கோடி கடன் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவில், ஏடிஎஃப் எரிபொருள் 45 சதவீதம் பங்கு வகிக்கிறது. இந்த நிறுவனங்களின் இயக்கச் செலவுகளில் 35 முதல் 50 சதவீதம் அமெரிக்க டாலரில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த இரு காரணங்களால்தான் எரிபொருளின் விலையு உயா்வும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.