லக்னௌ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவில் கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அவசியமின்றி, மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று லக்னௌ மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
லக்னௌவின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், செப்டம்பர் 17 வரை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை முன் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
எனவே, லக்னௌ வாழ் மக்களுக்கு கனமழை முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படிக்க.. தமிழகத்தில் காலாண்டுத் தேர்வு விடுமுறை எப்போது?
அதன்படி, மிகவும் தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவும். பழைய கட்டடங்களில் தங்கியிருக்க வேண்டாம், அதிக கூட்டம் நிறைந்த இடங்களுக்கும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களுக்கும் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை அருந்தவும், சுற்றுப்புறங்களில் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.