மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு லண்டன் சென்றடைந்தார்.
பிரிட்டனின் இரண்டாம் அரசியான எலிசபெத் கடந்த 9 ஆம் தேதி உடல் நலக்குறைவால் மறைந்தார். அதனைத் தொடர்ந்து அவருடைய உடல் ஸ்காட்லாந்தின் பால்மரால் அரண்மனையில் இருந்து லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அஞ்சலிக்காகக் கொண்டுவரப்பட்டது.
அங்கு லண்டனில் பிரிட்டன் நாடாளுமன்றம் அடங்கிய வெஸ்ட்மின்ஸ்டா் வளாகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக 4 நாள்கள் அரசியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | நிறுவனங்களை அச்சுறுத்தும் ‘நிலவு வெளிச்சம்’!
மேலும், அரசியின் இறுதிச் சடங்கு நாளை திங்கள்கிழமை (செப். 19) நடைபெறுவதால் அதில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் லண்டன் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், பிரிட்டன் அரசியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளவும், இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கவும் சனிக்கிழமை இரவு விமானம் மூலம் லண்டன் புறப்பட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லண்டன் சென்றடைந்தார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லண்டன் கேட்விக் விமான நிலையம் வந்தடைந்த திரௌபதி முர்முவை இந்திய தூதர்கள் வரவேற்றனர்.
வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நாளை நடைபெறவுள்ள பிரிட்டன் அரசியின் இறுதிச் சடங்கில் திரௌபதி முர்மு பங்கேற்க உள்ளார்.