வெற்றி வாய்ப்பு அதிகமாகியுள்ள மாநிலங்களில் முதல்வர் பதவியை ஏற்கப்போவது யார் என்பது குறித்து பாஜக தலைமை பதிலளித்துள்ளது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை (டிச. 3) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில், தெலங்கானாவைத் தவிர ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
குறிப்பாக ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் மிகப்பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறது.
4 மாநில தேர்தலில் 3 மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சி அமைப்பதற்காக வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.
பிற்பகல் 2 மணி நிலவரப்படி ராஜஸ்தானில் 114 தொகுதிகளிலும், மத்தியப் பிரதேசத்தில் 162 தொகுதிகளிலும், சத்தீஸ்கரில் 55 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், முதல்வர் பதவி யார் என்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, பாஜக தலைமை முடிவு செய்யும் என்ற பதிலை அளித்துள்ளது பாஜக.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் முதல்வர் யார் என்பது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் தேர்வு செய்வார்கள். 3 மாநிலங்களில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், பாஜக தலைமையகம் இந்த பதிலை அளித்துள்ளது.