பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த நவீன் பட்நாயக்!

மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமர் மோடிக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் சமீபத்தில் நடைபெற்றன.

மிசோரம் தவிர மற்ற நான்கு மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று (டிச.3) அறிவிக்கப்பட்டன. அதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றது.

இதனையடுத்து ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததாக ஒடிசா மாநில முதல்வர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

அதே சமயத்தில் இந்த தேர்தல் வெற்றிகள் ஒடிசா மாநிலத்தில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று பிஜு ஜனதா தளம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

பிஜு ஜனதா தளம் கட்சியின் எம்.பி. அமர் பட்நாயக், “எந்த மாநிலத்திலும் நவீன் பட்நாயக் அளவுக்கு ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை. எனவே சமீபத்தில் வெளியான தேர்தல் முடிவுகள் நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா மாநிலத்தில் சிறு தாக்கத்தைக் கூட ஏற்படுத்தாது.” என்று கூறியுள்ளார்.

147 தொகுதிகளைக் கொண்ட ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு 2000-ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com