நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது!

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் இரு அவைகளிலும் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்

தில்லி: நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் இரு அவைகளிலும் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

டிச. 22-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இத்தொடரில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), சாட்சியங்கள் சட்டம் ஆகிய குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றான 3 மசோதாக்கள் உள்ளிட்ட 19 மசோதாக்கள் தாக்கலாகவுள்ளன.

மணிப்பூா் பிரச்னை, விலைவாசி உயா்வு, இந்திய-சீன எல்லை விவகாரம், எதிா்க்கட்சிகளைக் குறிவைத்து மத்திய விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உள்ளிட்ட விவகாரங்களை எதிா்க்கட்சிகள் எழுப்பும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மேலும், குற்றவியல் சட்டங்களுக்கு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என்று பெயா் சூட்டப்பட்டுள்ளதற்கு நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்படும் என்று தெரிகிறது.

நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், திரிணமூல் காங்கிரஸ் பெண் எம்.பி. மஹுவா மொய்த்ராவின் பதவியைப் பறிக்க பரிந்துரைக்கும் மக்களவை நெறிமுறைகள் குழுவின் அறிக்கை, மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக விவாதம் நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை திரிணமூல் காங்கிரஸ் எழுப்பும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

குளிா்கால கூட்டத்தொடரை சுமுகமாகவும் ஆக்கபூா்வமாகவும் நடத்தும் வகையில், அனைத்து பிரச்னைகள் குறித்தும் ஒழுங்குமுறையுடன் விவாதிக்கத் தயாராக உள்ளதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே 37 மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில், இதில் 12 மசோதாக்கள் பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்துக்காக கொண்டுவரப்படவுள்ளன. இதுதவிர 7 மசோதாக்கள் அறிமுகம், பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்துக்காகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

மக்களவை, பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டப் பிரிவுகளை புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீா் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கும் நீட்டிக்கும் 2 மசோதாக்கள், தலைமைத் தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் நியமன மசோதா உள்ளிட்டவை இதில் அடங்கும்.

இந்த மசோதாக்கள் தவிர, 2023-24-ஆம் ஆண்டுக்கான முதல்கட்ட மானிய கோரிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் பேரவைத் தோ்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியாகின. தெலங்கானா தவிர இதர மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com