மக்களவை மீண்டும் கூடியுள்ள நிலையில், அவைத் தலைவர் ஓம் பிர்லா அத்துமீறல் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அலுவல்கள் இன்று வழக்கம்போல் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், மக்களவையின் பார்வையாளர்கள் மடத்தில் அமர்ந்திருந்த இருவர் திடீரென்று பகல் 1.12 மணியளவில் அவைக்குள் குதித்தனர்.
‘சர்வாதிகாரம் ஒழிக’ என்ற முழக்கங்களை எழுப்பியபடி, அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோட முயன்றவர்களை எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தியதாகவும், அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த மஞ்சள் நிறப் புகைக் குண்டுகளை வீசியதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்த தாக்குதலால் மக்களவை பரபரப்படைந்ததை தொடர்ந்து பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், மக்களவை 2 மணிக்கு கூடியவுடன் அத்துமீறல் குறித்து அவைத் தலைவர் ஓம் பிர்லா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் பேசியது:
“மக்களவை பூஜ்ய நேரத்தின் போது நடந்த சம்பவம் குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த தகவல்களை தில்லி காவல்துறைக்கு பகிரப்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் வீசியது சாதாரண புகை என்று தெரியவந்துள்ளது. யாரும் கவலைப்பட வேண்டாம்.
அவைக்குள் அத்துமீறிய இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நாடாளுமன்றத்துக்கு வெளியே இருந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.” என்று தெரிவித்தார்.