/

அஸ்ஸாமில் சந்தேகத்தின் பேரில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட பெண்

பழங்குடியினப் பெண்ணை சந்தேகத்தின் பேரில் உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் அஸ்ஸாமில் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :25 டிசம்பர் 2023, 2:02 pm

DIN

பழங்குடியினப் பெண்ணை சந்தேகத்தின் பேரில் உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் அஸ்ஸாமில் நிகழ்ந்துள்ளது.

வடக்கு அஸ்ஸாமின் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த பெண்ணின் கணவரான ராம் கபி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஞாயிற்றுக்கிழமை மாலை எனது மனைவி சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென சிலர் வீட்டிற்குள் புகுந்து எனது மனைவியை மந்திரவாதி என்று கூறி அடித்தார்கள். அடிக்க வேண்டாம் என்று தடுத்த என்னையும் தாக்கினார்கள்.

எங்களை அடிப்பதைப் பார்த்து எங்களது குழந்தைகள் அழுததால், அவர்களைக் கூட்டிச்சென்று அருகில் வசிக்கும் எனது சகோதரனின் வீட்டில் இருக்கச்சொல்லி விட்டு திரும்பி வந்தபோது, ​​​​என் வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.” என்று கூறினார்.

பின்னர் அப்பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக தேஜ்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அஸ்ஸாமின் சில பகுதிகளில் 'மந்திரவாதிகள் வேட்டை' என்ற பெயரில் கொலைகள் நடந்து வருகிறது. மாநில அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் என ஏராளமானோர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தும் கொலைகள் நிற்கவில்லை.

2017 ஆம் ஆண்டில், கௌஹாத்தி உயர் நீதிமன்றம் ஒரு நபரை மந்திரவாதி என்று முத்திரை குத்தி கொலை செய்வது மனிதாபிமானமற்ற செயல் என்று குறிப்பிட்டது.

2018 ஆம் ஆண்டில், அஸ்ஸாம் மந்திரவாதிகள் வேட்டை (தடை, தடுப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.