பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவருக்கு குழந்தை பிறந்தது எப்படி? 

நாட்டிலேயே முதல் முறை அதிசயமாக ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைக்கும், பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பிக்கும் குழந்தை பிறந்துள்ள சம்பவம்
பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவருக்கு குழந்தை பிறந்தது எப்படி? 


நாட்டிலேயே முதல் முறை அதிசயமாக ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைக்கும், பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பிக்கும் குழந்தை பிறந்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்துள்ளது. 

கேரள மாநிலம், கோழிக்கோடுவைச் சேர்ந்தவர் ஜியா பவல் (21). ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கை. இதே மாநிலத்தைச் சேர்ந்த ஜஹாத் (23) பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர். இளம் பருவத்திலேயே வீட்டை விட்டு வெளியேறி வசித்து வந்த இவ்விருவரும் காதல்வயப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்தனர். 

இவர்கள், மற்றவர்களைப்போல தாங்களும், தங்கள் பெயர் சொல்ல ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பியுள்ளனர். 

இதையடுத்து இவர்கள் கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்களின் ஆலோசனை பெற்றுள்ளனர். பெண்ணாக இருந்து ஆணாக ஜஹாத் மாறியபோதும், அவரது கருப்பை அகற்றப்படாததால் அவர் கருத்தரிப்பது சாத்தியம் என மருத்துவர்கள் தெரிவித்து, உரிய ஆலோசனைகளை வழங்கி அனுப்பியுள்ளனர். 

இந்த நிலையில் ஜஹாத் கர்ப்பம் தரித்தார். தொடர்ந்து மருத்துவ ஆலோசனையும் பெற்று வந்துள்ளனர். 

இந்நிலையில், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தாங்கள் பெற்றோராக போகிற தகவலை ஜியா பவல் மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தி இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இந்த நிலையில், கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய ஜஹாத்துக்கு வியாழக்கிழமை(பிப்.8) காலை சுமார் 9.30 மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. 

இது குறித்த தகவலை ஜியா பவல் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். 

ஜஹாத்தும், குழந்தையும் நலமாக உள்ளனர். ஆனால், குழந்தை மகனா, மகளா என்பதை சொல்ல தம்பதியர் மறுத்துவிட்டனர். "எங்கள் குழந்தை மகனா, மகளா என்பதை நாங்கள் இப்போது பொதுவெளியில் கூற விரும்பவில்லை" என தெரிவித்து விட்டனர். 

பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ஒருவர் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றுக்கொண்டிருப்பது நாட்டிலேயே இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது.

2017 இல் இங்கிலாந்தில் பெண்ணாக பிறந்தவர் ஆணாக மாற ஆசைப்பட்டு அதற்குரிய அறுவை சிகிச்சையை செய்து ஆணாக மாறினார். பின்னர் அவர் செயற்கை முறையில் விந்தணு தானத்தின் மூலம் கருத்தரித்து, பெண் குழந்தையை பெற்று எடுத்த சம்பவம் ஏற்கனவே நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com