அதிரடியும் அசுர பலமும்... இந்தியா - மேற்கிந்தியத் தீவுகளுக்கான மெய்நிகர் காலிறுதியில் வெல்லப்போவது யார்?
மெய்நிகர் காலிறுதியில் மோதும் இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளின் போட்டி குறித்து...


இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணி மோதும் சூப்பர் 8 சுற்றுக்கான போட்டி மெய்நிகர் காலிறுதி (Virtual QuarterFinal) என அழைக்கப்படுகிறது. ஏனெனில், இந்தப் போட்டியில் வெல்லும் அணி நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் நாளை (மார்ச் 1ஆம் தேதி) இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் இருக்கும் ஈடன் கார்டன் கிரிக்கெட் திடலில் மோதுகின்றன.
அன்றே கணித்த பயிற்சியாளர் டேரன் சமி
எந்த அணி வெல்கிறதோ அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும். ஒருவேளை, மழையினால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டால், நெட் ரன் ரேட் அடிப்படையில் முன்னிலையில் இருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பயிற்சியாளர் இந்த உலகக் கோப்பைப் போட்டியின்போது ஒருமுறை கூறிய வார்த்தை தற்போது வைரலாகி வருகிறது.
“இந்தியாவை வெல்லாமல் எந்த ஒரு அணியும் டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாது” எனக் கூறியிருந்தார். தற்போது, அந்த நிலைமைக்கு அவர்களது அணியே முதல்முறையாக எதிர்கொண்டிருக்கிறது என்பது சுவாரசியத்தைக் கூட்டியுள்ளது.
இந்தியாவின் பலம் என்ன?
இந்தியாவின் பலம் நிச்சயமாக அது பேட்டிங்தான். 8 பேர் வரை பேட்டிங் ஆடும் திறமைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்த உலகக் கோப்பையில் அதிகபட்சமாக 254 ரன்கள், 17 சிக்ஸர்கள் அடுத்துள்ளார்கள். கூடுதலாக, நல்ல ஃபீல்டிங் செய்வதும் இந்திய அணிக்கு உதவியாக இருக்கிறது.
தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ஃபார்முக்கு திரும்பியது இந்திய அணிக்கு ஆறுதலாக இருக்கிறது. தற்போது, சாம்சன் அடுத்த போட்டியில் இருப்பாரா அல்லது வழக்கமான இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா இணையுடன் இந்தியா களமிறங்குமா என்பதுதான் கேள்வியாக இருந்து வருகிறது.
அக்ஷேர் படேலை நீக்கிய போட்டியில் இந்தியா தோல்வியுற்றதால், இந்தியாவின் பிளேயிங் லெவன் முக்கியமான முடிவை ஏற்படுத்துவதாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் பலவீனம் என்ன?
இந்திய அணிக்கு பும்ரா, ஹார்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் நன்றாக பந்துவீசி இருக்கிறார்கள். வருண் சக்கரவர்த்தி ஒரு போட்டியைத் தவிர நன்றாகப் பந்துவீசி இருக்கிறார்.
ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் பென்னட் 97* ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து சிறு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அளவுக்கு அதிகமாக அதிரடி ஆட விரும்பினால் தென்னாப்பிரிக்காவிடம் 111 ரன்களுக்கு வீழ்ந்தது போல பேட்டிங்கிலும் இந்திய அணி சொதப்ப வாய்ப்பிருப்பது பலவீனமாகப் பார்க்கபடுகிறது.
மேற்கிந்தியத் தீவுகளின் ஒரே பலம் பேட்டிங்
இந்திய அணிக்கு அச்சுறுத்தலை உண்டாக்கும் அணிக்கான ஒரே தகுதி மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பேட்டிங் வரிசையிடமே இருக்கிறது.
தொடக்கத்தில் மெதுவாக விளையாடி இறுதிக் கட்டத்தில் மிக அதிரடியாக விளையாடி வெல்வதுதான் இந்த அணியின் ஃபார்முலாவாக இருக்கிறது.
தென்னாப்பிரிக்காவிடம் 83/7 ரன்களிலிருந்து 172/8 ரன்கள் வரை திடீரென ஒரு பாய்ச்சலை உண்டாக்கும் அசாத்திய திறமையும் அசூர பலமும் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் இருக்கிறது.
இந்தியாவை விட அதிகமான ஆல் ரவுண்டர்கள் இருப்பது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு கூடுதல் பலமாக இருக்கிறது.
அணித் தேர்விலும் பந்துவீச்சில் பலவீனம்
கிட்டதட்ட இந்திய அணியைப் போலவே இந்த அணிக்கும் மோசமான அணித் தேர்வுதான் முதல் தோல்வியைக் கொடுத்துள்ளது.
அகீல் ஹொசைன் இல்லாத போட்டியில் அந்த அணி தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியுற்றது.
இந்திய அணியை ஒப்பிட்டால் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் சுமாரான பந்துவீச்சே இருக்கிறது.
நுணுக்கமாக கூறினால், வேகப் பந்துவீச்சில் ஜஸ்ப்ரீத் பும்ரா - மேத்திவ் ஃபோர்டு, அர்ஷ்தீப் சிங் - ஷமேர் ஜோசப் என சமமாக இருக்க, ஹார்திக் பாண்டியாவின் இடத்தை நிரப்ப பல ஆல்ரவுண்டர்கள் சேர வேண்டியிருக்கிறது.
சுழல்பந்தில் வருண் சக்கரவர்த்தி - குடகேஷ் மோட்டி, அக்ஷர் படேல் - அகீல் ஹொசைன் என சமமாக இருக்கிறார்கள்.
யார் வெல்லுவார்கள்?
இந்தப் போட்டி மெய்நிகர் காலிறுதி மட்டுமல்ல, யார் வெல்கிறார்களோ அவர்கள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கும் செல்ல மிகப்பெரிய வாய்ப்பிருக்கிறது.
இரண்டு அணிகளுமே தென்னாப்பிரிக்கா என்ற ஒரே அணியிடம் மட்டுமே தோல்வியைச் சந்திருக்கிறது. அந்த அணியை அவர்கள் அரையிறுதியில் சந்திக்க முடியாது என்பது நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்திய அணி குல்தீப் யாதவை கொண்டு வருமா அல்லது வருண் சக்கரவர்த்தியுடன் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈடன் கார்டன் திடலில் சிறிது புற்கள் இருக்கும் என்பதால், வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்குமெனக் கணிக்கப்படுகிறது. அப்படியானால், பும்ரா - அர்ஷ்தீப் - பாண்டியா கூட்டணிக்கு அதிக விக்கெட்டுகல் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இவர்களது 12 ஓவர்கள்தான் போட்டியைத் தீர்மானிக்கவிருக்கிறது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பாக, டேரன் சமி டி20 உலகக் கோப்பையை கொல்கத்தாவில் ஏந்தியிருக்கிறார். தற்போது, டேரன் சமி பயிற்சியாளராக வந்திருக்கிறார்.
இந்தியாவை வீழ்த்த அவரது வியூகம் உதவுமா அல்லது கௌதம் கம்பீரின் வியூகம் உதவுமா என்பதைப் பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.
இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ்.
மேற்கிந்தியத் தீவுகள்: ஷாய் ஹோப் (கேப்டன்), ஜான்சன் சார்லஸ், ஷிம்ரோன் ஹெட்மயர், பிரண்டன் கிங், ரோவ்மேன் பவல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், குவென்டின் சாம்ப்சன், ரோஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், மேத்யூ ஃபோர்டே, அகீல் ஹொசைன், ஷமர் ஜோசப், குடகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...