/

இதை தில்லி முதல்வர் செய்தால் ஏற்றுக் கொள்வேன்; காங்கிரஸ் இப்படி செய்யலாமா? : பசவராஜ் பொம்மை

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக கூறியிருப்பதை பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது.

News image
Updated On :12 ஜனவரி 2023, 4:12 pm IST

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக கூறியிருப்பதை காங்கிரஸின் பொறுப்பற்ற தன்மையை காட்டுவதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பத்ரிகையாளர்களிடம் அவர் கூறியதாவது: காங்கிரஸின் இந்த தேர்தல் வாக்குறுதி அவர்கள் தேர்தல் பிரசாரத்தில் எவ்வளவு குறைவாக நடந்து கொள்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. காங்கிரஸின் இந்த முடிவு அவர்களது பொறுப்பற்றத் தன்மையையும், பகுத்தறிவின்மையையும் காட்டுகிறது. தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள் என்பது இதிலிருந்து நன்றாகத் தெரிகிறது. அதனால் தான் இது போன்ற வாக்குறுதியை அளித்துள்ளனர். இது போன்ற பல அறிவுப்புகளை காங்கிரஸிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

பொய்யான வாக்குறுதிகளை அளித்து தேர்தலில் வெற்றி பெறலாம் என காங்கிரஸ் நினைக்கிறது. இது போன்ற பொறுப்பற்ற வாக்குறுதிகளை அளிப்பவர்களால் தேர்தலில் வெல்ல முடியாது. இதே 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதை அரவிந்த் கேஜரிவால் அறிவித்திருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பேன். ஏனென்றால், அவர் அரசியலுக்கு புதியவர். ஒரு நாளைக்கு 6 மணி நேரம் கூட தடையற்ற மின்சாரம் தர முடியாத காங்கிரஸால் எப்படி இலவச மின்சாரம் தர முடியும் என்றார்.

அண்மையில், காங்கிரஸ் கர்நாடகத் தேர்தலுக்கான பிரசாரத்தைப் பேருந்து பயணத்தின் மூலம் யாத்திரையாக முன்னெடுத்துள்ளது.

வருகிற மே மாதத்தில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.