குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் குறித்து பொய்யான தகவல்களை வெளியிட்டதாக 6 யூடியூப் சேனல்களை முடக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய தகவல்தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் உண்மை கண்டறியும் குழு அவ்வப்போது சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையங்களில் பரவிவரும் பொய்யான தகவல்களைக் கண்டறிந்து உண்மைத் தன்மையை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் தேர்தல் ஆணையம் தொடர்பாக தவறான தகவல்களை வெளியிட்ட 6 யூடியூப் சேனல்களை அவ்வமைச்சகம் முடக்கியுள்ளது. இதுதொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி நேஷன் டிவி, சம்வத் டிவி, சரோகர் பாரத், நேஷன் 24, ஸ்வர்னிம் பாரத், சம்வாத் சமாச்சர் உள்ளிட்ட 6 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. இதில் நேஷன் டிவி 5.57 லட்சம் பின் தொடர்பவர்களுடனும், சம்வத் டிவி 10.9 லட்சம் பின் தொடர்பவர்களுடனும், சரோகர் பாரத் 21.1 ஆயிரம் பின் தொடர்பவர்களுடனும், நேஷன் 24 25.4 ஆயிரம் பின் தொடர்பவர்களுடனும், ஸ்வர்னிம் பாரத் 6.07 ஆயிரம் பின் தொடர்பவர்களுடனும், சம்வாத் சமாச்சர் 3.48 லட்சம் பின் தொடர்பவர்களுடனும் இயங்கி வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேனல்களில் இந்திய அரசு இயங்கும் முறை குறித்த தவறான தகவல்களும், ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான முகப்புப் படங்களும் வைத்து விடியோக்கள் பரப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.