ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கோயிலில் பிரார்த்தனை செய்துவிட்டுத் திரும்பும் போது, ஹரியாணாவைச் சேர்ந்த 5 பேர் சாலை விபத்தில் உயிரிழந்ததாக காவல்துறையினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
ராஜஸ்தான் மாநிலம், மாநிலம் சிகார் மாவட்டத்தில், சுஜாங்கர் அருகே உள்ள சலாசர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தரிசனம் செய்ய ஹரியாணாவைச் சேர்ந்த 5 பேர் காரில் சென்றுள்ளனர்.
இந்நிலையில், ஃபதேபூர்-சலாசர் நெடுஞ்சாலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அவர்கள் வந்த கார் எதிரே வந்த லாரி மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக டிஎஸ்பி ராஜேஷ் வித்யார்த்தி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த 5 பேரும், ஹரியாணாவின் ஃபதேஹாபாத் மாவட்டத்தை சேர்ந்த நண்பர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் ஹனுமானை பிரார்த்தனை செய்ய அங்கு சென்றுள்ளனர்.
இறந்தவர்கள் அஜய் குமார், அமித் சிங், சந்தீப் சிங், பிரதீப் சிங் மற்றும் மோகன் லால் என அடையாளம் காணப்பட்டது.