ஹிமாசலில் தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், விடியோ அழைப்பு மூலம் இரு குடும்பத்தார் திருமணம் செய்துகொண்டனர்.
பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வடமாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், ஹரியாணா, தில்லி, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
தொடர் மழையால் ஹிமாசலின் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. சில சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. முக்கிய நகரங்களின் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், சிம்லா மாவட்டத்திலுள்ள இரு குடும்பத்தினர் விடியோ அழைப்பு மூலம் திருமணம் செய்துகொண்டனர்.
மணப்பெண்ணும் அவரின் குடும்பத்தினரும் குல்லூ பகுதியிலுள்ளதால், திருமணத்திற்கு சிம்லா பகுதிக்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் திருமண வீட்டார் ஆலோசித்து, விடியோ அழைப்பு மூலம் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சிம்லாவிலிருந்த மணமகன் ஆஷிஷ் சின்ஹாவும் குல்லூ பகுதியிலிருந்த ஷிவானி தாக்குரும் விடியோ அழைப்பில் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.
மழையால் பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விடியோ அழைப்பில் நடந்த திருமணத்தின் விடியோவை இணையத்தில் பலர் பகிர்ந்து தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.