அதானிக்கு ஒப்பந்தங்களை பெற்றுத்தருவதுதான் பிரதமர் மோடியின் முக்கிய வேலையா? - ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

இலங்கையில் அதானி குழுமத்துக்கு ஒப்பந்தங்களை பெற்றுத்தருவதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய வேலையா? என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். 
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்
Published on
Updated on
2 min read


புதுதில்லி:  இலங்கையில் அதானி குழுமத்துக்கு ஒப்பந்தங்களை பெற்றுத்தருவதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய வேலையா? என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் தனது ட்விட்டர் பக்க பதிவில், பிரதமர் நரேந்திர மோடிக்கு மூன்று புதிய கேள்விகளை முன்வைத்துள்ளார்.  

"மார்ச் 13 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. அங்கு எங்கள் குறுக்கீடுகள், சபை குறிப்பில் இருந்து நீக்கப்படும். ஆனால், பிரதமர் மோடிக்கு நான் இதுவரை நேரடியாக விடுத்த 78 கேள்விகளை ஒருபோதும் நீக்க முடியாது”. 

இலங்கையில் அதானி குழுமத்துக்கு ஒப்பந்தங்களை பெற பிரதமர் மோடி எப்படி பாடுபட்டார் என்பதை பார்ப்போம்.

2019 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி, அப்போதைய இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே, கொழும்பு தெற்கில் உள்ள கிழக்கு கொள்கலன் (கன்டெய்னர்) முனையத்தை மேம்படுத்த இந்தியா, ஜப்பான், இலங்கை அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஓராண்டு கழித்து,  2020 ஜூன் 9 ஆம் தேதி, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவை, அந்த துறைமுகத்தை இயக்குவதற்கு அதானி போர்ட்ஸ் நிறுவனத்தை இந்தியா தேர்வு செய்துள்ளதாக அறிவித்தது. 

பின்னர், எதிர்பாராத விதமாக அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராஜபக்சே அரசு, அதற்கு பதிலாக கொழும்பு மேற்கு கொள்கலன் முனையத்தை கட்டி இயக்குவதற்கான 35 ஆண்டு குத்தகையை இந்தியா, ஜப்பான் அரசுகளுக்கு அளிப்பதாக அறிவித்தது. இதற்கான ஒப்பந்தம் 2021 செப்டம்பர் 30 ஆம் தேதி இறுதி செய்யப்பட்டது.

இந்தியா தனது பங்குதாரராக அதானி போர்ட்ஸ் நிறுவனத்தை நியமித்து இருப்பதாக இலங்கை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

இதற்கிடையே, கடந்த 5 ஆம் தேதி பேட்டி அளித்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சாப்ரி, ‘இது அரசுக்கும், அரசுக்கும்’ இடையிலான துறைமுக திட்டம் என்று கூறினார்.

“அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தில், அதானி நிறுவனத்தை என்ன அடிப்படையில் ‘தேர்வு செய்தீர்கள்?’ மற்ற இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதா? அல்லது நெருக்கமான நண்பர்களுக்கு மட்டும் இதை ஒதுக்கி விட்டீர்களா?”

இலங்கை மன்னார் மாவட்டத்தில் 500 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை அதானி குழுமத்துக்கு பெற்றுத்தர பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்துள்ளார்.

அந்த ஒப்பந்தத்தை அதானி குழுமத்துக்கு அளிக்குமாறு இந்திய பிரதமர் தன்னை நிர்ப்பந்திப்பதாக அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார். 

கடந்த ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி, “இலங்கை மின்சார வாரிய முன்னாள் தலைவர் பெர்டினாண்டோ, இலங்கை நாடாளுமன்றத்தில் இத்தகவலை தெரிவித்தார்.

பின்னர் அவர் 'பல்டி' அடித்தபோதிலும், நீங்கள் சிக்கியுள்ள அதானி குழும முதலாளித்துவத்துடான இந்த தொடர்பை முழுவதுமாக அம்பலப்படுத்தி உள்ளன” என்று குற்றம்சாட்டியுள்ள ஜெய்ராம் ரமேஷ், இந்த தொடர்புகள் மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கு தகுதியானவை இல்லையா? 

மேலும், இந்திய மக்களுக்காக பணியாற்றுவதை விட தன்னுடைய நண்பர் அதானிக்கு ஒப்பந்தங்களை பெற்றுத்தருவதுதான் பிரதமர் மோடியின் முக்கிய வேலையா? அவர் தனது மௌனத்தை கலைக்க வேண்டும் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

மோடி அரசு இந்தியாவின் உணவு தானிய தளவாடங்களை அதானி குழுமத்திடம் ஒப்படைக்க விரும்புகிறது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com