துணிச்சல்மிக்க பெண் தலைவரான மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாட்டின் பிரதமராக வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, இந்தியாவின் பிரதமராக இருந்திருக்க வேண்டும் என்று புகழாரம் சூட்டினார்.
இதையும் படிக்க | அமைச்சரான மகன் டிஆர்பி ராஜா! என்ன சொல்கிறார் டி.ஆர். பாலு?
இதுகுறித்து அவர் பேசியதாவது: மம்தா பானர்ஜியை யாராலும் மிரட்டவோ அச்சுறுத்தவோ முடியாது. மம்தா பானர்ஜி இந்தியாவின் பிரதமராக வேண்டும். அவர் ஒரு தைரியமான பெண். 34 ஆண்டுகளாக அவர் கம்யூனிஸ்டுகளை எப்படி எதிர்த்துப் போராடினார் என்பதைப் பாருங்கள். இப்போது அவர் என்ன செய்கிறார் என்பதைப் பாருங்கள். 10 நாள்களுக்கு முன்னதாக அவரை சந்தித்தேன். அது யாருக்கும் தெரியாது.
துணிச்சல்மிக்க பெண்ணாக ஜெயலலிதா இருந்த காலம் இருந்தது. ஒரு காலத்தில் மாயாவதியை நினைத்தேன். தற்போதைய சூழ்நிலையில் தலைநிமிர்ந்து நிற்கும் துணிச்சல் கொண்ட ஒரே பெண் தலைவர் மம்தா பானர்ஜி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், 'நாட்டிற்கு உண்மையான எதிர்க்கட்சி தேவை என்று நான் நினைக்கிறேன், ஆளுங்கட்சிக்கு நட்பில்லாத எதிர்க்கட்சி இந்தியாவிற்கு தேவை. அதிகாரத்தில் இருப்பவர்களால் அவர்களை அச்சுறுத்த முடியாது.
எனக்கு இன்று நிறைய பேரை தெரியும். அவர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஒரு கட்டத்திற்கு மேல் பேசமாட்டார்கள். ஏனென்றால், அமலாக்கத்துறை நம் பக்கம் திரும்பிவிடும் என்று பயப்படுகிறார்கள். அது இந்திய ஜனநாயகத்திற்கு நல்லதல்ல' என்று பேசியுள்ளார்.