அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி பெற்றால் மட்டுமே நாடு முன்னேறமடையும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தா பகுதியில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், உலகில் முதன்மை நாடாக இந்தியாவைப் பார்க்க வேண்டும் என்றால், நாட்டின் அனைத்து மாநிலங்களையும் வளமானதாகவும் வலிமையானதாகவும் மாற்ற வேண்டும்.
நரேந்திர மோடி பிரதமரானதும் பொருளாதாரத்தில் இந்தியா 11வது இடத்துக்கு முன்னேறியது. தற்போது மேலும் முன்னேற்றமடைந்து 5வது இடத்தில் இந்தியா உள்ளது.
உலகில் பல நாடுகள் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களைக் கூர்ந்து நோக்குகின்றன. மத்தியப் பிரதேசத்தில் பாஜக செயல்படுத்தும் திட்டங்களை மற்ற மாநிலங்கள் வியந்து பார்க்கும். மத்தியப் பிரதேசத்தில் தனிமனிதர் வருவாய் கட்டாயம் உயர்த்தப்படும் எனக் குறிப்பிட்டார்.