ஸ்ரீநகர்: மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்தியா தோற்றதைக் கொண்டாடிய ஏழு பல்கலைக்கழக மாணவர்களைக் கைது செய்தது தனக்கு அதிர்ச்சியளிப்பதாகவும் குழப்பம் வாய்ந்ததாகவும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரான மெகபூபா முப்தி இந்த விவகாரம் குறித்து விசாரிக்குமாறு ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
“வெற்றி பெற்ற அணிக்கு ஆரவாரிப்பது கூட காஷ்மீரில் குற்றமாக பார்க்கப்படுவது எனக்குக் குழப்பமாகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் உள்ளது. பத்திரிக்கையாளர்கள், செயல்பாட்டாளர்களுக்கு எதிராக சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தை பயன்படுத்துவதுபோல இப்போது மாணவர்கள் மீதும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்வது இந்த அரசின் இரக்கமற்ற மனநிலையைக் காட்டுகிறது” என தனது எக்ஸ் தளத்தில் முப்தி பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: அஸ்ஸாம்: 15 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்!
காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் வேளாண்துறையில் படிக்கும் ஏழு மாணவர்கள் மீது சக மாணவர் தன்னை துன்புறுத்தியதாகவும் இந்தியா தோற்றது குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகளைக் அவர்கள் கூறியதாகவும் அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டனர்.