தாணேவில் உணவு விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் தாயை, மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தில் 55 வயதுடைய பெண்ணுக்கும் அவரது மகனுக்கும் குடும்பப் பிரச்னை காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமை உணவு விவகாரத்தில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது சுவையான உணவு பரிமாறவில்லை எனக் கூறி தாயின் கழுத்தில் அவருடைய மகன் அரிவாளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் சுருண்டு விழுந்த தாய் சம்பவ இடத்திலேயே பலியானார். அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, உடனே அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே சம்பவத்திற்குப் பிறகு, தாயைக் கொன்ற நபர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.