இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து புதிய செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்ப உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இந்தியாவின் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சரான ஜித்தேந்திர சிங் மற்றும் நாசாவின் நிர்வாகியான பில் நெல்சனும் கடந்து செவ்வாய் அன்று சந்தித்துப் பேசினர்.
இந்த செயற்கைக்கோளுக்கு நாசா-இஸ்ரோ சின்தடிக் அபெச்சர் ரேடார் (NASA-ISRO Synthetic Aperture Radar) எனப் பெயர் சூட்டியுள்ளனர். 2024ல் இந்த செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளுக்கான ஜிஎஸ்எல்வி விண்கலம் தற்போது இஸ்ரோவால் உருவாக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க : சூரத்தில் ரசாயன தொழிற்சாலையில் தீ
இந்த செயற்கைக்கோள் மூலம் நிலநடுக்கம் போன்ற பேரிடர்களால் நிலத்தில் ஏற்படும் மாற்றங்கள், மலை மற்றும் துருவப்பகுதிகள், கடற்கரைப் பகுதிகள் தொடர்பான தகவல்கள் பெறப்படும் என டாக்டர். சிங் தெரிவித்துள்ளார்.
இந்த இணைந்த திட்டத்தின் மூலம் இந்திய விண்வெளி வீரர் ஒருவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மாவை பில் நெல்சன் புதன்கிழமை மும்பையில் சந்திக்கவிருக்கிறார்.