சிக்கிமில் திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட சேத அளவை மதிப்பீட்டை முடித்துவிட்டு மத்தியக் குழு தேசிய தலைநகருக்குப் புறப்பட்டது.
மத்திய அமைச்சகங்களின் பல்வேறு துறை அதிகாரிகளை உள்ளடக்கிய மத்தியக் குழுவானது, அக்.9 முதல் மூன்று நாள்கள் தொடர்ந்து வெள்ளப் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ததோடு, மாநில முதன்மைச் செயலர் பதக் மற்றும் மாநில அரசு உயர் அதிகாரிகளையும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது.
காங்டோக், பாக்யோங், மங்கன் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவுகளை நேரில் ஆய்வு செய்தனர். பல்வேறு சேதமடைந்த பாலங்களையும் குடியிருப்புப் பகுதிகளையும் அதிகாரிகள் பார்வையிட்டனர். மஜிகோன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கும் சென்று அங்கு நடந்து வரும் நிவாரணப் பணிகளையும் ஆய்வு செய்தனர்.
மத்தியக்குழுவினர் பாதிக்கப்பட்ட கட்டடங்கள், மின் கம்பிகள், சாலைகள் மற்றும் பாலங்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்தனர்.
சிக்கிமில் உள்ள நிலைமை, கள ஆய்வுகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான தொடர்பு ஆகியவற்றின் அடிப்படையில், சிக்கிமில் உள்கட்டமைப்பின் மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்பை மேற்கொள்வதற்கான நிதி உதவிக்காக மத்திய அரசுக்கு அவர்கள் பரிந்துரை செய்வார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
லோனாக் பனிப்பாறை ஏரியில் ஏற்பட்ட மேக வெடிப்பு, பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நகரங்கள் மற்றும் கிராமங்களை வெள்ளத்தால் மூழ்கடித்தது. சுமார் 87,300 மக்களை இது பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.