ஜி20 மாநாடு நிறைவடைந்துள்ள நிலையில், மக்களின் உண்மையான பிரச்னைகளை மோடி அரசு கவனம் செலுத்தவேண்டும் என பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில்,
ஜி20 உச்சி மாநாடு நிறைவடைந்து விட்டதால், மோடி அரசு உள்நாட்டுப் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் உணவுப்பொருள்களின் விலை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டில் வேலையின்மை 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
மோடி அரசின் தவறான நிர்வாகம் ஊழலுக்கு வழிவகுத்தது, இதை சிஏஜி பல அறிக்கைகளில் பாஜகவை அம்பலப்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் ரூ.13,000 கோடி ஜல் ஜீவன் ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த ஊழலை அம்பலப்படுத்திய தலித் ஜஏஎஸ் அதிகாரி சித்திரவதை செய்யப்பட்டார்.
மணிப்பூரில் கடந்த சில நாள்களாக மீண்டும் வன்முறை நிகழ்ந்து வருகின்றது. ஹிமாசலத்தில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் மோடி அரசு அதைத் தேசிய பேரிடராக அறிவிப்பதை தவிர்த்து வருகிறது.
மோடி அரசு உண்மையை மறைக்கக் கடுமையாக முயற்சித்து வருகிறது. பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்புவதற்குப் பதிலாக, உண்மையைக் கேட்கவும், பார்க்கவும் பொதுமக்கள் விரும்புகின்றனர். 2024-ல் மோடி அரசு வெளியேற்றுவதற்கான அனைத்து வழிவகைகளைப் பொதுமக்கள் செய்யத் தொடங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.