மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கட்ந்த 18ஆம் தேதி ஒப்புதல் அளித்த நிலையில், மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் செப். 19ஆம் தேதி மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார்.
புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் மசோதாவாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமைந்தது.
தொடர்ந்து நேற்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது விவாதம் நடைபெற்று மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 456 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் மசோதாவுக்கு ஆதரவாக 454 உறுப்பினர்களும், மசோதாவுக்கு எதிராக 2 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்வதால், மசோதா நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை எனும் நிலையில், வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்றதால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது.
இதனைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்யவுள்ளார்.
தொடர்ந்து, விவாதம் நடைபெற்று மாநிலங்களவையில் இன்றே இந்த மசோதா நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.