ராஜஸ்தானின், கோட்டாவில் 15 வயது மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள குர்ஜா நகரில் வசிக்கும் தனேஷ் குமார் சர்மா குன்ஹாரி பகுதியில் அவர் படிக்கு விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் தனேஷ் குமார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோட்டாவுக்கு வந்துள்ளார். அங்குள்ள ஒரு பயிற்சி மையத்தில் நீட்-யூஜி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார்.
தனேஷ் குமார் அன்றைய தினம் இரவு உணவை முடித்துவிட்டு, தான் தங்கியிருந்த விடுதி அறைக்குச் சென்றுள்ளார். பெற்றோரின் தொலைபேசி அழைப்புக்கு பதில் அளிக்காததால், கோட்டாவில் பெற்றோர்களுக்கு தெரிந்தவர்களை விசாரிக்க விடுதிக்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில், அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்தபோது தனேஷ் குமார் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.
பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மன அழுத்தம் காரணமாகவே மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மே.8-ம் தேதி பெங்களூரைச் சேர்ந்த முகமது நசித்(22), இந்த ஆண்டு நீட்-யூஜி தேர்வில் பங்கேற்ற நிலையில், அடுக்கு மாடிக் கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
கோட்டாவில் உள்ள பல்வேறு பயிற்சி மையங்களில் படிக்கும் குறைந்தது ஏழு மாணவர்கள் இந்த ஆண்டு இதுவரை தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், தீக்குளிக்க முயன்ற மாணவி ஒருவரும் சமீபத்தில் மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நீட் பயிற்சி மையத்தில் 15 பயிற்சி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளின் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்காக இந்த கல்வி அமர்வில் மட்டும் சுமார் 2.25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நகரத்தில் உள்ள பல்வேறு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.