தில்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை (மே 28) திறந்துவைக்கிறார்.
முன்னதாக, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் மோடி திறந்துவைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், குடியரசுத் தலைவர் திறந்துவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் திறப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 19 எதிா்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
இது குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முக்கு பெரும் அவமதிப்பு என்பதுடன் ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்றும் எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன.
ஆனால் இந்த நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதீஷ் குமார், 'புதிய நாடாளுமன்றத்தின் தேவை என்ன? வேண்டுமெனில் பழைய கட்டடத்தையே புதுப்பிக்கலாம். முந்தைய கட்டடம் ஒரு வரலாற்று சிறப்புமிக்கது. இவர்கள் இந்நாட்டின் வரலாற்றை மாற்ற முயற்சிக்கிறார்கள். இன்று நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்திலும், நாளை புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவிலும் கலந்துகொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை' என்று கூறியுள்ளார்.