
சித்தராமையா
தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாட்டுக்கும் காவிரிக்கும் இடையே பிரச்னை தொடர்ந்து நீடித்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடகம் தர மறுப்பதாக தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில் காவிரி நீர் பிரச்னைகளுக்காக அமைக்கப்பட்ட காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் 86-ஆவது கூட்டம் குழுவின் தலைவா் வினித் குப்தா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில், காவிரியில் அடுத்த 15 தினங்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீா் தமிழ்நாட்டுக்குத் திறந்து விட பரிந்துரை செய்தது.
இதையும் படிக்க | சென்னை நூலகத்தில் 3 மாதங்களாக கழிவறை நீர்க்கசிவு: ஒரு லட்சம் புத்தகங்கள் சேதமாகும் அபாயம்!
இந்நிலையில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று(புதன்கிழமை) பிற்பகல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
கூட்டம் முடிந்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, மழை இல்லாததால் கர்நாடகம் தீவிர தண்ணீர் பிரச்னையை எதிர்கொண்டு வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடும் சூழ்நிலையில் கர்நாடகம் இல்லை.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாட நாங்கள் முடிவு செய்துள்ளோம். மேலும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவிடமும் மனு அளிக்கவிருக்கிறோம். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் பேசுவார்கள். பிரதமர் மோடிக்கும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடமும் முறையிடுவோம்.
கர்நாடகத்தின் தண்ணீர் தேவையைப் போக்கவே 70 டிஎம்சி நீர் தேவைப்படுகிறது. எங்களிடம் 53 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பதால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடும் சூழல் இல்லை' என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க | அனைத்துக் கட்சிக் கூட்டம்: தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறந்துவிடக் கூடாது என தீர்மானம்?
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...