கர்நாடகம் மாநிலம் விஜயபுரா மாவட்டம், இண்டி தாலுகா லச்சியான் கிராமத்தை சேர்ந்த சதீஷ்- பூஜா தம்பதிக்கு ஒன்றரை வயதில் சாத்விக் என்ற ஆண் குழந்தை உள்ளது.
சதீஷின் தந்தை சங்கரப்பா அவரது வீட்டின் அருகில் உள்ள நிலத்தில் எலுமிச்சை சாகுபடி செய்து வருகிறார்.
சங்கரப்பா தனது நிலைத்தில் செவ்வாய்க்கிழமை புதியதாக ஆழ்துளைக் கிணறு ஒன்றை அமைத்துள்ளார். அக்கிணற்றில் தண்ணீர் வராததையடுத்து ஆழ்துளைத் கிணறை மூடாமல் விட்டுவிட்டார்.
திறந்த நிலையில் இருந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் புதன்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சாத்விக் தவறி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.
குழந்தையை காணாத பெற்றோர்கள் தேடியபோது ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் கடந்த 20 மணி நேரத்திற்கு மேலாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை சாத்விக்கை 20 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் உயிருடன் மீட்டனர்.